Tuesday 30 August 2011

வேலை வீடு தேடி வரப் போகிறது ?



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மைல் நீள கியூவில் காத்திருந்து, முட்டிமோதி கல்விச் சான்றிதழை
பதிவு செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடும். அப்படியே பதிவு செய்தாலும், அரசு வேலை என்பது கோடியில் சிலருக்குதான் கிடைக்கும். அந்த காலம் எல்லாம் இப்ப மலையேறியாச்சு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கூட வேலை, வீடு தேடி வரப் போகிறது.
இந்தாண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் படிப்பு, திறமை ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் டேட்டாபேஸ், அரசு துறைகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் ஆன்லைனில் பார்க்கும்படியான வசதியை அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இதில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் பட்டியலும் சேர்க்கப்பட உள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடன் உள்ள மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்காமலேயே அவர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகும்.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டக்குழுவின் இயக்குனர் மிஸ்ரா கூறுகையில், ‘இந்தாண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை தனியார் நிறுவனங்களும் பார்க்கும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு மற்று பயிற்சி துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்Õ என்றார். அரசின் இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், வேலை தேடி இளைஞர்கள் பல நிறுவனங்களின் படியேறிய காலம் மாறி, நிறுவனங்கள் திறமையான இளைஞர்களுக்கு வேலை தர போட்டி போடும் நிலை உருவாகும். வேலை உங்கள் வீடு தேடி வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
பயிற்சியும் உண்டு
‘இது ஒரு நல்ல முயற்சி. தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியலை பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய முடியும். படிப்புடன் பயிற்சி பெற்றவர்களுக்கும், படித்து முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த டேட்டாபேசை தொழிற்பயிற்சி நிறுவனங்களும் பார்க்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கும், பாதியில் படிப்பை நிறுத்தியவர்களுக்கும் தொழில்பயிற்சி அளித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும்Õ என தனியார் நிறுவன உரிமையாளர்களும், கல்லூரி நிர்வாகிகளும் கூறுகின்றனர்.