Sunday 18 September 2011

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்


பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால். அதற்கு இணையாக எந்த உணவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
இந்த நிலையில் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.
புட்டிப்பால் குடித்த வளர்ந்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் நுண்ணறிவித்திறன் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கனடிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
14,000 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது கண்டறியப்பட்டது.
தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்குக் காரணம் தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் தான் என்கின்றனர். அவற்றின் பங்களிப்பே குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் உடல்ரீதியான தொடுகைகள் மற்றும் குரல்(சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் மாயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதனால் தான் கடந்த காலங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போதும் உறங்க வைக்கும்போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடுவதை மரபாக வைத்திருந்தனர்.
ஆனால் குழந்தைகளின் நுண்ணறிவு வளர்ச்சியானது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்களால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.
குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்.
பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலத்தில் தாய்ப்பால் ஊட்டுவதற்கே நேரமில்லாத போது தாலாட்டுப்பாடி தூங்கவைக்க நேரமேது என்கின்றனர் வேலைக்குப்போகும் தாய்மார்கள்.
எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அவசியம் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்பதை இந்த ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.