Tuesday 20 December 2011

நினைத்ததை நடத்துபவர்-டிச., 21 சனிப்பெயர்ச்சி


மனிதனை நேர்வழிப்படுத்த இறைவனால் உருவாக்கப்பட்ட வையே கிரகங்கள். ஒவ்வொருவருக்கும், அவரவர் வினைப் பயனுக்கேற்ப சோதனைகளைக் கொடுத்து, ஒழுக்கமான வாழ்வைக் கடைபிடிக்க அவை உதவி செய்கின்றன. யாகங்கள் செய்வதாலோ, பிற பரிகாரங்களைச் செய்வதாலோ மட்டும் கிரகங்களின் பிடியில் இருந்து தப்பி விட முடியாது. நியாயமாக, ஒழுக்கமாக வாழ்வதே இதற்குத் தீர்வு.
குறிப்பாக, சனீஸ்வரன் மிகவும் கண்டிப்பானவர். சிறிய தவறுகளுக்கு கூட, பெரிய தண்டனை கொடுப்பார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன் சோதனையைத் தந்தே தீருவார். இதற்கு ஆதாரமாக புராணகதை ஒன்றுண்டு. ஒருமுறை, தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அந்த மண்டபத்தில் தேவலோகத் தினருக்காக ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை; அதே நேரம், அவரது மனைவி பார்வதி, மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள். சிவபெருமானும், மனைவிக்காக சம்மதிப்பது போல் நடித்தார்.
தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், “இதைக் கட்டி முடித்தாலும், எரிந்து போகும்; சனீஸ்வரரின் பார்வை சரியில்லை…’ என்றார். இருந்தாலும், சனீஸ்வரரை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி, மண்டப பணிக்கு பச்சைக் கொடி காட்டினாள்; மண்டப பணி சிறப்பாக முடிந்தது.
பின், சிவனிடம், “மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன், நாம் சொன்னதை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவனுடைய பார்வையால் எரிவதற்கு முன், நானே மண்டபத்தை எரித்து விடுகிறேன். அவன் ஜெயித்ததாக இருக்கக் கூடாது…’ என்றாள் பார்வதி.
நீதி தவறாமல், எல்லாருக்கும் பாவ – புண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுவிட்டு, உத்தரவு போட்டவரான சிவபெருமானே அதை மீறுவாரா?
எனவே, அவர் பார்வதியிடம், “நானே நேரில் சனீஸ்வரனிடம் சென்று விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால், நான் தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். அவன் மண்டபத்தை பார்ப்பதற்குள் நீ தீ வைத்து விடு…’ என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, “தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக் கொடேன்…’ என்றார்.
“என் எஜமானராகிய நீங்களே சொல்லும் போது, நான் என்ன செய்ய முடியும்? மண்டபத்தை ஒன்றும் செய்ய மாட்டேன்; விட்டு விடுகிறேன். ஆனால்…’ என்று இழுத்தார். “ஏன் இழுக்கிறாய்? என்ன சொல்ல விரும்புகிறாயோ, சொல்…’ என்றார் சிவன்.
“பெருமானே… தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை எல்லாரும் பார்த்து ரசித்துள்ளனர்; நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் நல்லது…’ என்றார். “இவ்வளவு தானே… எனக்கு சகாயம் செய்த உனக்கு இதைக்கூடவா செய்ய மாட்டேன்…’ என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார்.
பார்வதியின் காதில் உடுக்கை சப்தம் விழுந்தது. “ஆஹா… சிவன் உடுக்கை அடிக்கிறாரே… சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே…’ என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். நியாயஸ்தரான சனீஸ்வரன் தன் கடமையைச் செய்து விட்டார்.
எந்த தெய்வத்தை வணங்கினாலும், அவரவர் பாவ – புண்ணியத்தைப் பொறுத்து, சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம். அதே நேரம், மெதுவாக நகரும் கிரகமான இவரை, ஊனமுற்றவர் என புராணங்கள் சொல்கின்றன. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர்களையும், நேரம் காலம் பார்க்காமல் பணி செய்து, கடமையை சரிவர செய்பவர்களையும் அண்ட மாட்டார்.