Friday 16 December 2011

கி.வா.ஜ சிலேடைகள்

புடவையின் சிறப்பு... 
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.

வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,

'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.

'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.

'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.

உள்ளே வெளியே
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".

வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!


  உப்புமா    குத்துகிறதா''
*குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ.

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார்.  பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!

தொண்டை கட்டு

தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்..  ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார் உ.வே.சா.

அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.ஜ. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.

'என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் உ.வே.சா!

நாற்காலி மனிதன்
“ஒரு முறை கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை.கி.வா.ஜ அவர்களைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள்.கி.வா.ஜ மறுத்தார்.”நீங்களே தலைவராக அமரவேண்டும்” என்றார்கள் அன்பர்கள்.”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை” என்று கேட்டார் கி.வா.ஜ.

இம்மை - மறுமை
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே “இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

எங்கே விழுது?

கி.வா.ஜ  அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

 தலைவனை பையனாக...?
கி.வா.ஜவை  ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார். அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜ. விடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
==================================
** சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ என்ற இப்புத்தகம், வாகீச கலாநிதி திரு.கி.வா.ஜகன்னாதன் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற வேடிக்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.நிகழ்ச்சிகள் மட்டுமன்றி,சில  சிலேடைக் கவிதைகளையும், சில வெறிவிலக்குத்துறைப்பாடல்களையும் உள்ளடக்கியது. இது போன்று நிறைய நிகழ்ச்சிகள் சுவாரசியமாகவும், சுருக்கமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.

புத்தக வெளியீடு : அல்லயன்ஸ் கம்பெனி,
244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
தபால் பெட்டி எண் 617,
மைலாப்பூர்,சென்னை - 600 004.
தொலைபேசி - 044-4941314.
 -- ------
 மேலும் சில பின்னூட்டங்கள்-1

திரு. கி.வா.ஜ அவர்கள் ஒருமுறை அவர் நண்பர் வீட்டுக்கு போயிருந்த போது, பாலும், பழமும் கொடுத்துள்ளார்கள். அவர் சிலேடையாக, இங்கு எனக்கு பழம் பால் கிடைத்தது என குறிப்பிடாராம்.
(பழம் பால் - பழைய பால் என்கிற அர்த்தமும் வரும்)
===============

ஒரு முறை பள்ளியில் பேசும்போது, 'மாணவர்களே! கூட்டலுக்கும் பெருக்கலுக்கும்
வித்தியாசம் தெரியுமா?" என்று கேட்டார் கி.வா.ஜ.

மாணவர்கள் விடைதெரியாமல்
விழிக்க 'இரண்டும் ஒன்றுதான். என் வீட்டு வேலைக்காரிக்குக்கூடத் தெரியுமே! என்றார்.
=======================

சொல்லின் செல்லாதவர்!
வாரியாருக்கும் கி.வா.ஜா.வுக்கும் இடையே அன்பு மிகுதி. கி.வா.ஜ.வின் சிலேடைகளை வாரியார் ரசிப்பதுண்டு. வாரியாரின் தமிழ் நயம் செறிந்த சொற்பொழிவுகளை கி.வா.ஜ. வியப்பதுண்டு.

ஒருமுறை வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார் கி.வா.ஜ. கடைசிவரை இருந்து கேட்டு விட்டுப் போகுமாறு வாரியார் கூறினார்.
'இயன்றவரை கேட்கிறேன். எனக்கு வேறு பணி உள்ளது. இறுதிவரை இருக்க இயலுமா தெரியவில்லை' என்று சொல்லிவிட்டு கி.வா.ஜ. சொற்பொழிவு கேட்க அமர்ந்தார்.

சிலேடைச் செல்வரைப் பார்த்ததும் வாரியாருக்கும் அன்று சிலேடைத் தமிழில் உற்சாகம் ஏற்பட்டது. ராமாயணத்தின் இறுதிப் பகுதியை எடுத்துக் கூறிய வாரியார் பல சிலேடை வாக்கியங்களை இடையிடையே உதிர்த்தார். வாரியாரின் சொல்லாற்றலில் கட்டுண்ட கி.வா.ஜ. தம் பணிகளை மறந்து இறுதிவரை அமர்ந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் வாரியாரிடம் சென்றார் கி.வா.ஜ. 'கடைசிவரை இருந்து கேட்டீர்களே' என்று வாரியார் மகிழ்ச்சியடைந்தார்.

'உங்கள் சொற்பொழிவு அருந் தேன். அதை அருந்தேன் என்று எவன் சொல்வான்? அருந்தவே இருந்தேன். நீங்கள் சொல்லின் செல்வர்'' என்று வாரியாரைப் பாராட்டினார் கி.வா.ஜ.

வாரியாரோ ''சொல்லின் செல்வர் அல்ல நான். அது அனுமனுக்கு உள்ள பட்டமல்லவா?'' என்று அடக்கத்தோடு மறுத்தார்.

'உண்மை தான். நீங்கள் சொல்லின் செல்வர் அல்ல. நீங்கள் சொல்லின் எல்லோரும் செல்லாமல் இருந்தல்லவா கேட்கிறோம்! ' என்றார் கி.வா.ஜ.!
------------------------------------

கி.வா.ஜ வீட்டு வேலைக்கார அம்மா விசாலம் என்பவர் வீடு பெருக்கிக்கொண்டிருந்தார்களாம்.. அந்த அம்மா கொஞ்சம் குண்டு. கி.வா.ஜவின் மணைவி கொஞ்சம் நகந்துக்குங்க, விசாலம் பெருக்கனும் என்றார்களாம்.. அதுக்கு கி.வா.ஜ இன்னுமா விசாலம் பெருக்கணும் என்று கேட்டாராம்..



 ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.

 

ஓகோ! கடை சிப்பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ.

------------------





ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார்.

“மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,

“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ

-----------------------



கலைவாணரைக் காணச் சென்றார் கி.வா.ஜ. அவரை வரவேற்று உபசரித்த கலைவாணரின் மனைவி மதுரம், “என்ன சாப்பிடுகிறீர்கள்... காபியா, டீயா?” என்று கி.வா.ஜ-வைக் கேட்க, கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே “டீயே மதுரம்!” என்றாராம்.