Tuesday 1 January 2013

ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்

கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிவோம் . இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.

1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.

2. தாய்தந்தையர்கள் ஆண் மக்களை நம்பாது பெண் பிள்ளைகளை நம்புவர்.

3. பெண்களின், தூய்மை, பெண் தன்மை மாயவசத்தால் அழிந்து போகும்.

4. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.

5. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.

6. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.

7. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.

8. தன் மகளின் கற்பை தந்தையே சூரையாடுவன்.

9. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.

10. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.

11. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.

12. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.

13. உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, புகைப்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.

14. தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.

15. தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.

16. குலத்தொழில்கள் மாறுபடும்.

17. ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.

18. ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.

19. சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.

20. சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.

21. வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)

22. வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.

23. திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.

24. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி , காசி விசாலாட்சி சாமி சிலைகளில் கண்ணில் கண்ணீர் வரும்.

25. காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும்.

26. எல்லா சிவலிங்ககளிலும். வியர்வை உண்டாகும்.

27. திருப்பதி கோவிலில் முதலை புகுந்து அதனால் பூஜைகள் மூன்று நாட்கள் தடைப்படும்.

28. காளஹஸ்தி சுவர்ணமகி ஆற்றில் அதிசியம் தோன்றும்

29. காளஹஸ்தி கோபுரங்கள் சேதமடையும்.

30. புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர்.

31. அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.

32. முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.

33. புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.

34. மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.

35. நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.

36. குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.

37. இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.

38. இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.

39. உண்மைகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.

40. நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.

41. பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.

42. மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.

43. ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.

44. சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.

45. கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.

46. போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.

47. உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.

48. கண்பார்வை மிகையாக கெடும்.

49. எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.

50. மக்களின் சராசரி வயது குறையும்.

51. செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

52. முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.

53. மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.

54. நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)

55. வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.

56. பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.

57. இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.

58. இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.

59. இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.

60. நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.

61. கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

62. பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.

63. பசுவின் கருவில் மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.

64. ஒரு முட்டையிலிருந்து இரண்டு குஞ்சுள் வெளிவரும்.

65. யானை வயிற்றில் பன்றி முகத்தோடும், பன்றி வயிற்றில் குரங்கு முகத்தோடும், குட்டி பிறக்கும் .

66. வேப்பமரத்தின் இலைகள் இனிப்பாக மாறும்.

67. எண்ணையில்லாமல் விளக்குகள் எரியும் (மின்சாரம்)

68. ஆண், பெண் உறவு இல்லாமல் குழந்தை பிறக்கும் (Test Tube Baby)

69. பாலை விட தண்ணீர் அதிக விலைக்கு விற்கும்.

70. குழந்தையில்லாத குறைகள் அதிகமாகும்.
இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார். ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.