Wednesday 30 January 2013

விஸ்வரூபம்


விஸ்வரூபம் படம் தொடர்பாக கடந்த இருநாட்களாக நான் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நான் அதிகம் விமர்சிக்கப்படுவதை அறிவேன். முதலில் ஒரு விசயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.. கமலஹாசன் எனக்கு மாமனோ மச்சானோ அல்ல. விஸ்வரூபத்தை புறக்கணிப்பதும், போராடுவதும் நமது ஜனநாயக உரிமை. ஆனால் 7கோடி மக்களின் பிரதிநிதிகளாக நம்மை நாமே கற்பனை செய்துகொண்டு நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒட்டுமொத்தமாகத் தடை கோருவதும் பச்சை ஃபாசிசம்.

இதை நான் சொன்னதற்குத்தான் என்னை சொந்த சமூகத்தைச் சேர்ந்த துரோகி, இனத்தை கெடுக்க வந்த கோடாரிக் காம்பு என்றெல்லாம் பட்டம் சூட்டுகின்றனர். அதிலும் ஒருவர் என்னை... ஒரு இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த என்னை...5 வேளை தொழுகின்ற என்னை... ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணமுடித்த என்னை... என் குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பெயர் சூட்டி இன்றும் குரானைக் கற்பித்துக்கொண்டிருக்கும் என்னை... நீ இஸ்லாமியனே அல்ல என்று பதிவு போடுகின்றார்!! இஸ்லாத்தை சரியாகப் புரிந்ததால்தான் இந்த நிலையை எடுத்தேன் என்று அந்த மூடர்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை.

மீண்டும் என் நிலைப்பாட்டைச் சொல்கிறேன்... கமல் இஸ்லாத்தை,இஸ்லாமியர்களை அவமதித்து இருந்தால் படம் வந்ததும் படம் பார்த்து எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். கோர்ட்டு இருக்கின்றது. அங்கு தடை கோருங்கள். அதைவிடுத்து வரக்கூடாது என்று சொல்வது அடக்குமுறை,பாசிசம். அதை இஸ்லாம் எதிர்க்கிறது. நபிகளின் வாழ்வில் இருந்தே அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தினமும் நபிகளார் தொழுகைக்குச் செல்லும் போது ஒரு பெண்மணி தனது வீட்டு மேல் இருந்து தெருவில் செல்லும் நாயகம் மீது குப்பை கொட்டுவார், அவர் குப்பை கொட்டுவதை ஒருநாளும் நபிகள் நாயகம் வெறுக்கவில்லை, தனது ஆதரவாளர்களை விட்டு அந்தப் பெண்ணை அடிக்கவோ,கொல்லவோ சொல்லவில்லை. மாறாக அவர் பணி கொட்டுவது, என் பணி கடந்து செல்வது என்று அமைதியாகச் சென்றார். ஒருநாள் அவர் அந்த வீட்டைக் கடந்தபோது அவர் மேல் குப்பை கொட்டப்படவில்லை. காரணத்தை அவர் விசாரித்தபோது அவள் உடல்நிலை சரியில்லாது படுத்து இருப்பதை அறிந்தார். இல்லத்தின் உள்ளே சென்று அவள் நலம் பெற பிராத்தித்தார். அவளைத் தன் செய்கைக்கு வெட்கப்படச் செய்தார். இதுதான் நபிகளார் வழி, நான் கடைபிடிக்கும் வழி.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம். இந்தியத் திருநாட்டில் அப்போது இருந்த 10 கோடி முஸ்லீம்கள் வருத்தப்பட்டார்கள் என்றால் அதே நேரத்தில் 50 கோடி இந்துக்கள் அதைவிட அதிகம் வருத்தப்பட்டார்கள், எதிர்த்தார்கள். அதனால்தான் இன்றுவரை பி.ஜே.பியால் மெஜாரிட்டி ஆட்சி இந்த தேசத்தில் அமைக்க முடியவில்லை. இது அப்பட்டமான நாம் நம் வாழ்நாளில் கண்ணால் கண்ட, கண்டுகொண்டு இருக்கின்ற உண்மை. படம் வரட்டும். அதில் தவறு இருந்தால் நம்மைவிட நம் மாற்று மத சகோதரர்கள் அதிதீவிரமாக எதிர்ப்பார்கள். நான் என் உடன் பிறந்த சகோதர்களைவிட உடன்பிறவா சகோதர்களை அதிகம் நம்புகிறேன்.


நன்றி: தோழர். M.m. Abdulla