Tuesday 26 February 2013

நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் சில பழக்கவழக்கங்கள்!!!

 ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் நிறைய மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். தூக்கம் சரியாக இல்லையெனில், அவை உடல் நலத்தை பாதிப்பதோடு, முகத்தை பொலிவிழக்கச் செய்யும். மேலும் சரியான தூக்கமின்மை கருவளையத்தை ஏற்படுத்தி, முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதுமட்டுமின்றி, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், மன அழுத்தம் மற்றும் தலை வலி போன்றவையும் ஏற்படும்.
அதனால் நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு தூக்க மாத்திரைகளைப் போடுவார்கள். ஆனால் அவ்வாறு தூக்கம் வர வேண்டும் என்பதற்காக மாத்திரைகளைப் போட்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். பின் அந்த மாத்திரைகளை போடாமல், தூக்கமே வராது என்ற நிலைமை வந்துவிடும். எனவே அந்த மாதிரியான பழக்கங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
எனவே தூக்கம் நன்கு வருவதற்கு தூக்கத்தை வரவழைக்கும் ஆரோக்கிய உணவுகளை சாப்பிட்டு, வரவழைக்கலாம். அதே சமயம் தூக்கத்தை கெடுக்கும் செயல்களையும் தவிர்க்க வேண்டும். நிறைய பேர் தூங்கும் போது ஒரு சில பழக்கங்களை மேற்கொள்வார்கள். ஏனெனில் அந்த செயல்கள் எல்லாம் நன்கு தூக்கத்தை வரவழைக்கும் என்பதாலேயே. ஆனால் உண்மையில் அந்த செயல்கள் எல்லாம் ஆரோக்கியமான தூக்கத்தை வரவழைக்காமல், உடல் நலத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். உதாரணமாக, சிலர் புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் சாட் செய்வது என்று செய்வார்கள். இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைக்கக்கூடியவை.
சரி, இப்போது தூங்கும் போது செய்யக்கூடிய ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழக்கங்களைத் தவிர்க்கலாமே!!!
புத்தகம் படிப்பது
புத்தகம் படிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. ஏனெனில் புத்தகத்தைப் படித்தால், இரவில் நன்கு தூக்கம் வரும் என்பதால் தான். ஆனால் உண்மையில் தூங்கும் முன் புத்தகம் படித்தால், கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு, தூக்கமானது பாதிக்கப்படும்.
பாட்டு கேட்பது
நிறைய மக்களுக்கு பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும். மேலும் சிலர் அந்த பாட்டை தூங்கும் போது கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். ஆனால் நன்கு நிம்மதியான மற்றும் ஆரோக்கியமான தூக்கம் வேண்டுமெனில் பாட்டு கேட்பதை தவிர்க்க வேண்டும்.
டிவி பார்ப்பது
சிலர் தூங்கும் போது டிவி பார்த்துக் கொண்டே தூங்குவார்கள். இதனால் கண்களுக்கு தான் அதிக அழுத்தம் ஏற்படும். பின் தூக்கம் பாதிக்கப்படும்.
லேப்டாப்
நிறைய மக்கள் படுக்கையறையில் தூங்கும் முன், மடியில் லேப்டாப்களை வைத்து சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு தூங்குவர். அவ்வாறு லேப்டாப்பை பயன்படுத்திவிட்டு தூங்கினால், தூக்கம் பாதிக்கப்படுவதோடு, மனஇறுக்கம் ஏற்படும்.
வீடியோ கேம்ஸ்
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமே வீடியோ கேம்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் அதற்கு அடிமையே ஆகிவிடுவர். ஆனால் அந்த வீடியோ கேம்ஸை தூங்கும் முன் ஆர்வத்துடன் விளையாடினால், உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். பின் தூக்கமே வராது. ஆகவே இதனை காலை அல்லது மாலை விளையாடுவது நல்லது.
உடற்பயிற்சி
காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையெனில், அந்த உடற்பயிற்சியை சிலர் இரவில் செய்வார்கள். அவ்வாறு செய்தால், உடலில் உள்ள மெட்டாபாலிசமானது அதிகரித்து, உடலானது நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். எனவே நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இரவில் படுக்கும் போது உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
படுக்கையறை வெளிச்சம்
சிலருக்கு படுக்கும் போது வெளிச்சம் இல்லையெனில் தூக்கம் வராது. ஆகவே அத்தகையவர்கள் இரவில் படுக்கும் போது படுக்கையறையில் நன்கு மங்கலான வெளிச்சத்தை தரும் பல்புகளை பயன்படுத்தினால், நல்ல தூக்கம் வரும். ஒருவேளை நன்கு வெளிச்சம் தரும் பல்புகளை பயன்படுத்தினால், தூக்கம் தான் தடைபடும்.
காபி
காபிக்கு குறைந்தது 6 மணிநேர தூக்கத்தை தடுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தூங்கும் போது புத்தகம் படித்துக் கொண்டே காபி குடித்தால், தூக்கமானது முற்றிலும் போய்விடும்.
ஆல்கஹால்
நிறைய பேர் இரவில் படுக்கும் போது தான் ஆல்கஹாலைப் பருகுவார்கள். ஏனெனில் அவ்வாறு குடித்தால், நன்கு தூக்கம் என்பதால் தான். ஆனால் உண்மையில் அவற்றை குடித்தால், உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்து, அவை நிலையான தூக்கம் மேற்கொள்வதைத் தடுக்கும்.
தண்ணீர்
தண்ணீர் குடிப்பது நல்லது தான், ஆனால் அவற்றை இரவில் படுக்கும் போது அதிகம் குடித்தால், பின் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இதனால் நல்ல தூக்கம் தடைப்படும்.