Tuesday 12 November 2013

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:

திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
=============================

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது
இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
=====

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன்
மணமகள் கழுத்தில் கட்டி
வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால்
செய்தது என்பது இதன்
பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து
பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து பொற்றாலி க்கினர்.

அருகு-மணை எடுத்தல்:
==================

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு
நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ
வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள்
அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும்
வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து
வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து
போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள்
அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

முகூர்த்தக்கால் நடுதல்:
========================

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
========================

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும்
பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய
இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு
கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும்
சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச்
செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
============================

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு
கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள்
வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
==============

அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல்
வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல்
வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத்
தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள்
சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
=============

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு
வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக
இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
=============

1.உண்மை உரைத்தல்.
2.தர்மம் செய்தல்.
3.சோம்பல் தவிர்த்தல்.
4.பொறாமை விடுதல்.
5.பொறுமை கொளல்.
6.தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
===============

1.நன்மக்கள்.
2.செல்வம்.
3.அழகு.
4.நோயின்மை.
5.இளமை.
6.கல்வி.
7.வாழ்நாள்.
8.நல்வினை.
9.பெருமை.
10.துணிவு.
11.வலிமை.
12.வெற்றி.
13.நல்லுணர்வு.
14.புகழ்.
15.நுகர்ச்சி.
16.நல்ல நண்பன்.

மஞ்சள்,மருதாணியின் சிறப்பு:
=======================

1.குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2.மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3.மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4.கை,கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
==========================

இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன்
வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள்
என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல்
போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச்
சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும்
மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி
வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து
வெற்றிலை பாக்கு வைத்து மூன்று
தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்றோம் என
இருவீட்டாரும் கூறி ஏழு
பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று
சொன்ன சொல் தவறுவதில்லை
என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:
====================

கணவன், கொழுநன்:
-------------------------------

கண் அவன்.பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும்.நம்மை நல்வழி நடத்திச்
செல்லும் கண்ணைப் போல்
பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

மனைவி:
--------------

மனைவி,துணைவி,இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.